| ADDED : ஆக 03, 2024 11:00 PM
வாழப்பாடி:வாழப்பாடி அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது கணவர் கொடூரமாக தாக்கிய வீடியோ பரவி வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், வாழப்பாடி, புதுப்பாளையம் அருகே செல்லப்பன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஜய், 26. சிங்கிபுரம் அருகே புது காலனியை சேர்ந்தவர் உமா, 23. இருவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 6 மாத பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. 21ம் தேதி மதியம், துப்பட்டாவால் துாக்கிட்டு உமா தற்கொலைக்கு முயன்றதாக கூறி, வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அஜய் சேர்த்தார். மேல் சிகிச்சைக்கு சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.உமாவின் தாய் சிவகாமி, வாழப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அஜய், உமா திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆவதால், சேலம் ஆர்.டி.ஓ., அபிநயாவும் விசாரிக்கிறார். இந்நிலையில் உமாவை, பிளாஸ்டிக் பைப் மூலம் கொடூரமாக அஜய் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.வாழப்பாடி போலீசார் கூறியதாவது:அஜய் மொபைல் போனில் வீடியோ பதிவாகியிருந்தது. அதில் அவர், உமாவை, அவரது தாய் வீட்டுக்கு போக சொல்லி, பிளாஸ்டிக் பைப்பில் அடித்து சித்ரவதை செய்கிறார். ஆனால், இது எப்போது, எதற்கு நடந்தது என தெரியவில்லை. இதை யாரோ சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதனால் உமா தற்கொலை குறித்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.