ஏற்காடு:கள்ளக்குறிச்சி
லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து,
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா
உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு
சேகரித்தனர். தொடர்ந்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த, 119 கிளை செயலர்கள்,
நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில் இளங்கோவன் பேசியதாவது:அரசு
பள்ளி, கல்லுாரிகளில் படித்த ஏழை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட
மடிக்கணினி, திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்
உள்ளிட்டவற்றை நிறுத்திவிட்டனர். 10 ஆண்டில், 55 லட்சம் மாணவ,
மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.தி.மு.க., ஆட்சியில்
நிறுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து, அ.தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு
செல்லும்போது, திண்ணை பிரசாரமாக செய்ய வேண்டும். அதேபோல் அனைத்து
ரேஷன் கார்டுகளுக்கும், பொங்கல் பண்டிகைக்கு, 2,500 ரூபாய்
வழங்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை, அனைத்து குடும்பங்களுக்கு
வழங்குவதாக, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக கூறிய நிலையில்,
ஆட்சிக்கு வந்த பின், 1,000 ரூபாயை தகுதியானவர்களுக்கு
வழங்குவதாக கூறி, பலருக்கும் வழங்கவில்லை. 10 ஆண்டு அ.தி.மு.க.,
ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தி.மு.க., ஆட்சியில், பல
மடங்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வீடு இல்லாத மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுப்பட்டன. இத்திட்டத்தையும் நிறுத்திவிட்டனர்.
ஏற்காடு, மஞ்சக்குட்டையில், 100 கோடி ரூபாயில், கூட்டுறவு பயிற்சி
மையம், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த நிலையில், தி.மு.க., அரசு
நிறுத்திவிட்டது. இத்திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் ஏற்காடு
சுற்றுலாத்தலம் மேம்படும்.இவ்வாறு அவர் பேசினார்.அ.தி.மு.க.,வின் ஏற்காடு ஒன்றிய செயலர் அண்ணாதுரை, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.