உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாய் கடித்ததில் பலியான ஆட்டை வைத்து டவுன் பஞ்., ஆபீஸ் முன் தம்பதி போராட்டம்

நாய் கடித்ததில் பலியான ஆட்டை வைத்து டவுன் பஞ்., ஆபீஸ் முன் தம்பதி போராட்டம்

மேட்டூர், நாய் கடித்ததில் பலியான ஆட்டை, டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் போட்டு தம்பதியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேட்டூர், வீரக்கல்புதுார் தேர்வு நிலை டவுன் பஞ்சாயத்து, 14வது வார்டு, குருவாக்காடு, பச்சியம்மன் கோவில் எதிரே வசிப்பவர் ரமேஷ், 30. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோகுலபிரியா, 22. இவர், 15 செம்மறி ஆடுகளை வளர்த்தார். அதில், 5 ஆடுகளை, அப்பகுதியில் திரியும் வெறிநாய்கள் கடித்து கொன்று விட்டன. கடந்த, 25ல், பட்டியில் அடைத்திருந்த மேலும், 2 ஆடுகளை, நாய்கள் கடித்து கொன்றுவிட்டன. இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பட்டிக்குள் புகுந்த நாய்கள், மேலும் ஒரு செம்மறி ஆட்டை கொன்று, மற்றொரு ஆட்டை கடித்து விட்டு ஓடின. இதனால் இறந்த ஆட்டையும், காயம் அடைந்த ஆட்டையும் எடுத்துக்கொண்டு வந்து, ரமேஷ், கோகுலபிரியா, காலை, 9:00 மணிக்கு, வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் போட்டனர். தொடர்ந்து நாய்கள் அட்டகாசத்தை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போராட்டத்தில் ஈடுபட்டனர். செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், இறந்த நாயை பரிசோதனை செய்யவும், குருவாக்காடு பகுதியில் தெரு நாய்கள் அட்டகாசத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால், 5 மணி நேர போராட்டத்தை, தம்பதியர் கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !