ஏற்காட்டில் வாடகைக்கு ஓட்டிய 9 சொந்த வாகனங்களுக்கு அபராதம்
ஏற்காடு:ஏற்காட்டில், இரு நாட்களாக, தமிழக மருத்துவர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.அதற்கு வந்த மருத்துவர்களுக்கு, சேலத்தில் இருந்து, சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்து வந்ததாக, ஏற்காடு வாடகை கார் டிரைவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள், ஏற்காடு போக்குவரத்து போலீசாரிடம் நேற்று புகாரளித்தனர்.இதனால் போலீசார், நேற்று காலை ஏற்காடு மலைப்பாதையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 9 வாகனங்கள், வாடகைக்கு எடுத்து வந்தது உறுதியானது. அந்த வாகனங்களுக்கு, தலா, 10,000 வீதம், போலீசார் அபராதம் விதித்தனர்.அப்போது அங்கிருந்த உள்ளூர் கார் டிரைவர்கள், 'நீங்கள் ஏன் சொந்த பயன்பாட்டு கார்களை வாடகைக்கு ஓட்டி எங்கள் வாழ்வாதாரத்தை கெடுக்கிறீர்கள்' என கேட்டு, அந்த வாகனங்களை சிறைபிடித்தனர். போக்குவரத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.