ஏரியில் குப்பை கொட்டி தீ வைக்கும் நகராட்சி
இடங்கணசாலை: இடங்கணசாலை நகராட்சியில் துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து உரமாக்க, கஞ்சமலையூரில் குடோன் உள்ளது. ஆனால், பெயர் அளவுக்கு மட்டும் செயல்படுவதால், தினமும் சேகரிக்கப்படும் குப்பையை கே.கே.நகர் ஏரியில் ஆங்காங்கே கொட்டி, நகராட்சி பணியாளர்கள், தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் கே.கே.நகர், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதி குடியிருப்புவாசிகள், சாலையில் செல்வோர், மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் பலனில்லாததால், மக்கள் அவதி தொடர்கிறது.