போலீஸ் ஸ்டேஷனில் மயங்கி விழுந்த ஓய்வுபெற்ற ஊர்காவல் படைவீரர் சாவு
சேலம் சேலத்தில் போலீஸ் விசாரணையை தொடர்ந்து, ஸ்டேஷனில் அமர்ந்திருந்த ஓய்வு பெற்ற ஊர்காவல் படைவீரர் மயங்கி விழுந்து இறந்தது, சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, உலிபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி, 65; ஊர்காவல் படை வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே, பத்திர அலுவலகம் நடத்தும் வீரசம்பு என்பவரிடம் உதவியாளராக பணியாற்றினார். நான்கு மாதங்களுக்கு முன், வீரசம்புவின் பழைய டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டை விலைக்கு வாங்கியுள்ளார். பணம் தராமல் காலம் தாழ்த்திய நிலையில் வேலைக்கும் சரிவர செல்லவில்லை. நேற்று முன்தினம் சேலம் டவுனில் துரைசாமியை பார்த்த வீரசம்பு, 'வேலைக்கும் வரவில்லை. வாகனத்துக்கு பணமும் தரவில்லை' என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில், போலீசாரிடம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என வீரசம்பு கூறியுள்ளார். பின் அவர் ஓட்டி வந்த மொபட்டிலே ஏறிக்கொண்டு, டவுன் ஸ்டேஷனுக்கு சென்றனர்.இருவரிடம் போலீசார் விசாரித்த நிலையில், பணத்தை தருமாறு துரைசாமிக்கு அறிவுறுத்தியுள்ளனர். இரு நாட்களில் தந்து விடுகிறேன் என கடிதம் எழுதி தருமாறு போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு சம்மதம் தெரிவித்து ஸ்டேஷனில் அமர்ந்திருந்த துரைசாமி திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், துரைசாமிக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததும், தற்போது உடல்நிலை சரியின்றி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர். நேற்று உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.