| ADDED : ஜூலை 09, 2024 07:22 PM
கீழடி:சிவகங்கை மாவட்டம், கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வில் இதுவரை இரண்டு குழிகள் தோண்டப்பட்டு பாசிகள், கண்ணாடி மணிகள், தா என்ற தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு, மீன் உருவம் பதித்த பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இதில், ஒரே குழியில் இரண்டு பானைகள், அடுத்த குழியில் சரிந்த நிலையில் கூரை ஓடுகள், துளைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் குடியிருப்புகள் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.2,600 ஆண்டுகளுக்கு முன் இங்கு கூரை அமைத்து வாழ்ந்திருப்பதற்கான அடையாளம் ஐந்தாம் கட்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்டது. சரிந்த நிலையில் கூரை ஓடுகளும் அதன் அருகிலேயே மரக்கம்புகளை நடவு செய்வதற்கு வசதியாக துளைகளும் காணப்பட்டன. தற்போது 10ம் கட்ட அகழாய்விலும் அவை கண்டறியப்பட்டுள்ளன. துளைகளில் நடப்பட்ட மரக்கம்புகளை கரையான்கள் அரிக்காமல் இருக்க ஆற்று மணலும் கொட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு பானைகளும் ஒரே குழியில் அருகருகே இருப்பது குடியிருப்பு இருந்ததற்கான ஆதாரமாக கருதப்படுகிறது. பானைகளின் முழு உருவம் வெளியே வந்த பின் தான் அவை எதற்காக பயன்படுத்தப்பட்டது என தெரியவரும். பத்தாம் கட்ட அகழாய்வு பணிகளில் தொல்லியல் துறை கீழடி பிரிவு இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் உள்ளிட்டோர் தலைமையில் தொல்லியல் துறை மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.