| ADDED : ஜூலை 05, 2024 11:42 PM
திருப்புவனம்: மதுரை - ராமேஸ்வரம் ரயில் பாதையில் உள்ள ரயில்வே கேட் மேடு பள்ளங்களாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் பாதை இடையே குறுக்கிடும் சாலைப்போக்குவரத்திற்கு வசதியாக தானியங்கி ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளன. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, டி.வேளாங்குளம், வெள்ளிக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள தானியங்கி ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. அந்த இடத்தில் தரைப்பகுதி பெயர்த்து எடுக்கப்பட்டு சரளை கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்கும் மேலாக இன்று வரை அந்த இடங்கள் சரி செய்யப்படவில்லை. சரளை கற்களாக கிடப்பதால் டூவீலர் மற்றும் நடந்து செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பள்ளி, கல்லுாரி திறந்து செயல்பட தொடங்கிய நிலையில் மாணவ, மாணவியர்களை ஏற்றி கொண்டு ஆட்டோக்கள் தினசரி ரயில்வே கேட் பகுதியை கடந்து செல்லும் போது மாணவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.