| ADDED : மே 17, 2024 07:05 AM
காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரில் நாதஸ்வரம், தவில் கற்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதால் குருகுல முறைப்படி மடாலயத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கோயில் நிகழ்ச்சி, திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அங்கு முக்கிய பங்கு வகிப்பது நாதஸ்வரமும், தவிலும் தான். இன்று எத்தனையோ இசைக்கருவிகள் வந்தாலும் இந்த இசைக்கருவிகளுக்கு தனி மதிப்பு உண்டு. அதனை அறிந்தே அழிந்து வரும் இந்த இசைக்கருவிகளை இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் இசைக்க தொடங்கியுள்ளனர்.காரைக்குடி அருகேயுள்ள கோவிலுார் மடாலயத்தில், ஞானதேசிக சுவாமிகளால் குருகுல முறைப்படி வாத்திய இசைப்பள்ளி உருவாக்கப்பட்டது. தொடந்து நாச்சியப்ப சுவாமிகள், மெய்யப்ப சுவாமிகள் தொடங்கி, தற்போது நாராயண சுவாமிகளால் வழிநடத்தப்பட்டு வருகிறது.மதம் இனத்திற்கு அப்பாற்பட்டு 45 வயது வரை உள்ள ஆண் பெண் அனைவருக்கும் இசை வாத்தியமான நாதஸ்வரம், தவில் வாசிப்பு கற்றுத் தரப்படுகிறது.சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை திருநெல்வேலி விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெண்களும் ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.இசை ஆசிரியர்கள் வேதமுத்து மற்றும் டி.கே. கணேசன் கூறுகையில்;கோவில்கள் திருமணம் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் வாசிக்க இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்று ஆண்டு பயிற்சி காலமாகும். ஆனால் கற்பதற்கு காலமில்லை. அவரவர் திறமைதான். குருகுல முறைப்படி தங்கும் வசதி உணவு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது இசை வாத்திய வாசிப்பு குறைந்து வரும் நிலையில் பல இளைஞர்கள் ஆர்வமுடன் கற்கத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகள் வரை தங்களது இசையை இசைத்து புகழ் பரப்பி வருகின்றனர்.