சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 2023 ம் ஆண்டு நடந்த 1,243 சாலை விபத்துக்களில் 392 பேர் பலியாகியுள்ளனர். 983 பேர் காயமுற்றனர். 38 கொலைகள் அரங்கேறியுள்ளன.சிவகங்கை மாவட்டம் வழியாக மதுரை-- தொண்டி, கொச்சி -- ராமேஸ்வரம், திருச்சி -- ராமநாதபுரம், பெரம்பலுார் - - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக முக்கிய சுற்றுலா தலங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.மது அருந்தியும், போக்குவரத்து விதி மீறி ஓட்டுதல், இரவில் துாக்கமின்றி வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களால் வாகன விபத்து நாளுக்கு நாள் சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. 1,243 விபத்தில் 392 பேர் பலி
2023ம் ஆண்டு ஜன., 1 முதல் டிச., 31 வரை மாவட்ட அளவில் 1,243 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. அதில், சம்பவ இடத்திலேயே 392 பேர் இறந்துள்ளனர். 983 பேர் காயமுற்றனர். முன்பகை, குடும்பம், இடப்பிரச்னைக்காக 38 கொலை வரை கடந்த ஆண்டு நடந்துள்ளன. மாவட்டத்தில் கொலை குற்றங்கள் மற்றும் தொடர் குற்றச்சம்பவங்கள், கஞ்சா விற்பனையை தடுக்க சிவகங்கை எஸ்.பி., பி.கே., அர்விந்த் பரிந்துரைப்படி கலெக்டர் ஆஷா அஜித், கடந்த ஆண்டு 27 பேரை (2022ம் ஆண்டு 52 குண்டாஸ் பதிவு) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார். கடந்த ஆண்டில் மட்டுமே போலீசார் வாகன சோதனையின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 4 லட்சத்து 2 ஆயிரத்து 390 வாகனங்களுக்கு ரூ.37 கோடியே 91 லட்சத்து 79 ஆயிரத்து 200 அபராதம் விதித்துள்ளனர்.