ஊர் பெயர் இல்லாமல் அரசு பஸ்கள் இயக்கம்: குழப்பத்தில் பயணிகள்
காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து எஸ்.பி.பட்டினத்திற்கு இயக்கப்படும் பஸ் ஒரே பஸ்சாக இல்லாமல், வேறு வேறு பஸ்கள் இயக்கப்படுவதோடு, ஊர் பெயர் பலகையும் இல்லாததால் பயணிகள் குழப்பமடைகின்றனர். காரைக்குடியிலிருந்து தேவகோட்டை, திருவாடானை, மதுரை, திருச்சி, ராமநாதபுரம் விருதுநகர் கோவை சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. புதுவயல், கானாடுகாத்தான், குன்றக்குடி, கல்லல், அமராவதிபுதுார் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளுக்கு 20க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, காலை 8:30 மணிக்கு தேவகோட்டை வழியாக எஸ்.பி.பட்டினம் வரை அரசு பஸ் தினமும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை நம்பி அரசு ஊழியர்கள் உட்பட பலர் உள்ளனர். இந்த பஸ், குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லை. பல நேரங்களில் இயங்குவதே இல்லை என பயணிகள் புகார் கூறுகின்றனர். வரும் நேரங்களிலும் ஒரே பஸ் இயக்கப்படாமல், வேறு வேறு பஸ்கள் இயக்கப்படுவதால் எந்த பஸ் என்று தெரியாமல் பயணிகள் குழப்பமடைகின்றனர். ஊர் பெயர் பலகையும் வைப்பதில்லை. சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.