மினி பஸ் வழித்தடங்கள் குலுக்கல் முறையில் தேர்வு
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மினி பஸ் வழித்தடத்திற்கு அனுமதி பெற காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்தவர்களுக்கு நாளை கலெக்டர் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் தேர்வு நடத்தப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் போக்குவரத்து சேவை இல்லாத பகுதிகளாக 43 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. புதிய மினி பஸ்க்கான அனுமதிக்காக விண்ணப்பிக்க மார்ச் 10 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 43 வழித்தடங்களில் குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கு வரப்பெற்ற ஆட்சேபனை மற்றும் புகார் மீது எடுக்கப்பட்ட தீர்வு நடவடிக்கையால் ஆறு வழித்தடங்கள் திரும்பப் பெறப்பட்டது.சில வழித்தடங்களின் வழித்தட துாரம் மாற்றியமைக்கப்பட்டு அறிவிக்கை வெளியீடு செய்யப்பட்டது. ஒரு வழித்தடத்திற்கு இரண்டிற்கு மேல் விண்ணப்பம் வந்தால் அவ்வழித்தடத்திற்கான அனுமதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.எனவே வழித்தட விபரத்தை ஏப்.4 காலக்கெடுவிற்குள் திருத்தம் செய்து விண்ணப்பத்தை மீண்டும் சமர்ப்பித்தவர்கள் மட்டும் நாளை காலை 11:00 மணிக்கு அலுவலக கூட்டரங்கில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.