சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில்புறக்காவல் நிலையம் வர்த்தகர், ஊழியர்கள் கோரிக்கை
சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்ட தலைநகரான சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் வழியே- சென்னை, வாரணாசி,- ராமேஸ்வரம், விருதுநகர் - திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிவகங்கையில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு செல்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன் எதிரே மதுக்கடை செயல்படுவதால் சிலர் குடித்து விட்டு ரகளை செய்கின்றனர். இரவில் சென்னையில் இருந்து வரும் ரயிலில் வரும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடியில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. இது தவிர ரயில்வே பாதுகாப்பு படையினரும் அவ்வப்போது ரயிலில் பாதுகாப்பிற்காக பயணிக்கின்றனர்.ஆனால், மாவட்ட தலைநகரில் உள்ள சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில், புறக்காவல் நிலையம் கூட இது வரை திறக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து ரயிலில் சிவகங்கை வரும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக புகார் கூறுகின்றனர்.இதை தவிர்க்க ரயிலில் வரும் பயணிகளின் பாதுகாப்பிற்கென ரயில்வே போலீசாரை கொண்டு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து சிவகங்கை நகர் வர்த்தக சங்க தலைவர் அறிவுதிலகம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பியுள்ளனர்.