| ADDED : ஜூன் 30, 2025 06:44 AM
காரைக்குடி : காரைக்குடி முக்கிய ரோட்டை ஆக்கிரமித்து தள்ளுவண்டி உணவகம் பெருகிவிட்டதால், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் அதிகரித்து வருகிறது. காரைக்குடி மாநகராட்சியில் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர். பாரம்பரிய சுற்றுலா தலமாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள புது பஸ் ஸ்டாண்ட் ரோடு, கல்லுாரி, 100 அடி, ரயில்வே ரோடு, கழனிவாசல், பர்மா காலனி உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் ரோட்டோரத்தில் தள்ளுவண்டிகள் மூலம் துரித உணவகம் புற்றீசல் போல் அதிகரித்துள்ளன. இந்த உணவகங்கள் முன் வாகனங்களை நிறுத்துவதால், ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன. தள்ளுவண்டி உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் கெமிக்கல் சாய பவுடர்களை துாவி சமைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே ரோட்டோர ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் என காரைக்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.