| ADDED : ஜூலை 05, 2024 11:47 PM
நிலக்கடலை விவசாயம் அதிகமான இவ்வொன்றியத்தில் கடலை எண்ணெய் தயாரிப்பு அதிகம் இருந்தது. சிங்கம்புணரியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 40-க்கும் மேற்பட்ட கடலை எண்ணெய் ஆலைகள் இருந்தன. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் வரவால் இந்த ஆலைகளின் எண்ணிக்கை குறைந்து தற்போது 5 மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சிங்கம்புணரி கடலை எண்ணெய் என்றாலே பல்வேறு மாவட்டங்களில் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்த நற்பெயரை பயன்படுத்தி நகரில் கடை வியாபாரிகள் சிலர் கலப்பட எண்ணெய்யை விற்று வருகின்றனர்.மினரல் ஆயிலை மனசாட்சி இல்லாமல் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுடன் கலப்படம் செய்து பாட்டில்களில் அடைத்து விற்கின்றனர்.இன்னும் சிலர் மினரல் ஆயில்களில் சமையல் எண்ணெய்களுக்குரிய எசன்ஸ் வேதிப்பொருளை மட்டும் கலந்து விற்கின்றனர்.உற்பத்தி ஆலைகளில் விற்கப்படும் விலையில் 40 சதவீதம் வரை கடைக்காரர்கள் குறைவாக விலை நிர்ணயிப்பதால் கிராம மக்கள் ஆபத்தை அறியாமல் விலை குறைவு என்று கருதி கலப்பட எண்ணெய்யை வாங்கி செல்கின்றனர்.சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் அளித்தும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பெயரளவுக்கு மட்டுமே வந்து அவ்வப்போது சோதனை நடத்தி செல்கின்றனர். கடைகளில் சாம்பிள் எடுக்க வந்தாலும் அவர்களிடம் தரமான ஆலைகளில் வாங்கப்பட்ட நல்ல எண்ணைய் வகைகளை கொடுத்து சரிக்கட்டி விடுகின்றனர்.இச்சுற்று வட்டாரத்தில் தரமான, கலப்படம் இல்லாத எண்ணெய் உற்பத்தி செய்து விற்கும் ஆலைகளும், கடைகளும் உள்ளன. ஆனால் ஏமாறும் மக்கள் விலை குறைவு காரணமாக அவற்றை கண்டு கொள்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கலப்பட எண்ணெய் விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.