| ADDED : நவ 22, 2025 12:27 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் முன்பகையால் டீக்கடைக்காரர் சற்குணத்தை 55, ஓட ஓட விரட்டி கொலை செய்த கிழவனுாரைச் சேர்ந்த ஹரிராஜ் 32, மாதவன் 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மறவமங்கலம் அருகே கிழவனுாரைச் சேர்ந்தவர் சற்குணம் 55. இவர் மறவமங்கலம் சந்தைபேட்டை விலக்கில் டீக்கடை நடத்தி வந்தார். நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு டீக்கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். டூவீலரில் சென்ற இருவர் அரிவாளால் இவரை ஓட ஓட விரட்டினர். அவர் சந்தைபேட்டைக்குள் தப்ப முயன்ற போது விடாமல் வெட்டி கொலை செய்தனர். இதில் ஈடுபட்ட கிழவனுாரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மாதவன் 32, சாத்தையா மகன் ஹரிராஜ் 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சற்குணம் கொலையை கண்டித்து அவரது உறவினர்கள் நேற்று மதியம் பரமக்குடி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., அமலஅட்வின் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசார் கூறியதாவது: சற்குணம் சகோதரர் கருப்பையாவுக்கும், ஹரிராஜ் மாதவன் தரப்பினருக்கு முன்பகை இருந்தது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கருப்பையாவை கொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களுடன் டூவீலரில் ஹரிராஜ், மாதவன் ஆகியோர் அவரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது வந்த பஸ்சில் ஏறி கருப்பையா காளையார்கோவில் சென்றுவிட்டார். அவரை விட்டு விட்டோமே என்ற ஆத்திரத்தில் கையில் ஆயுதங்களுடன் டூவீலரில் கிழவனுாருக்கு திரும்பினர். அப்போது எதிரே வந்த கருப்பையாவின் தம்பி சற்குணத்தை பார்த்து இவரை கொலை செய்வோம் என்ற நோக்கத்தில் வெட்டி கொலை செய்துள்ளனர் என்றனர். 11 மாதங்களில் 35 கொலைகள் இம்மாவட்டத்தில் மாதத்திற்கு குறைந்தது 2 முதல் அதிகபட்சம் 6 வீதம் 2025 ஜன., முதல் நவ., 21 வரை 35 கொலைகள் நடந்துள்ளன.