| ADDED : ஜூலை 18, 2024 05:22 AM
பெரியகுளம், : பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்ட நிலையில், விமர்சையாக நடந்த உற்ஸவ அம்மன் வீதி உலாவில் திரளாக பங்கேற்ற பக்தர்கள் அம்மன் தரிசனம் பெற்றுச் சென்றனர்.இக்கோயில் ஆனித்திருவிழா ஜூலை 8ல் கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாட்கள் நடந்தது. தினமும் இரவில் அம்மன் சிம்மம், ரிஷபம், அன்னபட்சி, குதிரை, யானை, மின்விளக்கு, பூப்பல்லக்கு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா நடந்தது. நேற்று ஆடி 1 முக்கிய திருவிழாவான 10ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் அதிகாலை 12:00 மணிக்கு பக்தர்கள் அக்னிசட்டி எடுக்க துவங்கினர். இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரம் கண் பானை எடுத்துநேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமானோர் இரட்டை அக்னிசட்டியும், குழந்தையை தொட்டிலில் கட்டியும், கன்னத்தில் அழகு குத்தி அக்னிசட்டி எடுத்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது சொந்த ஊரான பெரியகுளம் திருவிழாவிற்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். ஜூலை 23 ல் மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள், செயல் அலுவலர் சுந்தரி செய்திருந்தனர். பெரியகுளம் டி.எஸ்.பி., குரு வெங்கட் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.