| ADDED : ஜூலை 06, 2024 05:49 AM
ஆண்டிபட்டி : மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூலை 3ல் இருந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து ஜூலை 3 காலை 9:30 மணிக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு பிக்கப் அணையில் இருந்து மதகுகளில் இருந்து கால்வாய் வழியாக பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டது. அன்றைய தினம் மதியம் 12:00 மணிக்கு அணையில் திறக்கப்பட்டநீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாகவும், நேற்று காலை 10:30 மணிக்கு வினாடிக்கு 750 கன அடியாகவும் உயர்த்தப்பட்டது.நீர் திறப்பை படிப்படியாக உயர்த்துவது குறித்து வைகை அணை நீர்வளத் துறையினர் கூறியதாவது:வைகை பிக்கப் அணை மதகுகளின் ஷட்டர்கள் தற்போது மின் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இதற்கான வேலைகள் சமீபத்தில் முடிந்து முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஷட்டர்களின் உறுதி தன்மையை அறியவும், பாதுகாப்பு கருதியும் இந்த முறை நீர் திறப்பின் அளவு படிப்படியாக உயர்த்தப்படுகிறது. அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி, இன்று அல்லது நாளை முதல் வினாடிக்கு 900 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேறும். மதுரை, தேனி ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறும். இவ்வாறு தெரிவித்தனர்.