கால்நடை மருந்தகங்களில் மருந்து இன்றி கால்நடை வளர்ப்போர் அவதி
கம்பம்:கால்நடை மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், குளுகோஸ் உள்ளிட்ட மருந்து பொருள்கள் இல்லாததால், கால்நடை வளர்ப்போர் அவதிப்பட்டு வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் 3 கால்நடை மருத்துவமனைகள், 52 மருந்தகங்கள், 48 கிளை நிலையங்கள் உள்ளன. இவற்றிற்கு அந்தந்த தரத்திற்கு ஏற்ப ஆண்டிற்கு 4 முறை மருந்துகள் சப்ளை செய்யப்படும். ஆனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மருந்து சப்ளை செய்யவில்லை. இதனால் மருந்தகங்களில் மருந்துகள் , சிரப்புகள், தடுப்பூசிகள், குளுகோஸ் உள்ளிட்ட கால்நடைகளின் நோய் தீர்க்கும் மருந்துகள் கையிருப்பு இல்லை. இதனால் கால்நடை வளர்ப்போர் குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் விவசாய தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெளியில் கால்நடை மருந்து கடைகளில் சென்று வாங்க வேண்டும் என்றால் அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது. இதனால் கால்நடைகளின் நோயை குணமாக்கும் வழி தெரியாமல் கால்நடை வளர்ப்போர் அவதியில் உள்ளனர்.இணை இயக்குநர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மருந்தகங்கள், கிளை நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சப்ளை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.