| ADDED : ஜூலை 22, 2024 07:17 AM
தேனி: தேனி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஆட்டோக்கள் விதிகளை பின்பற்றாமல் இயக்கப்படுவதால் நகர் பகுதியில் மற்ற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போலீசாரோ கண்டும் காணாமல் பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால் பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.தேனி மதுரை ரோட்டில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கம்பம், போடி பகுதிளில் இருந்து வரும் வாகனங்கள், பெரியகுளம் ரோடு, அல்லிநகரம், அன்னஞ்சி விலக்கு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால், பெரியகுளம் ரோட்டில் இயக்கப்படும் ஆட்டோக்கள் கண்ட இடங்களில் போக்குவரத்து விதிகளை மதிக்கமால் நிறுத்தப்படுகின்றன. இதனால் நேருசிலை சிக்னல், என்.ஆர்.டி., ரோடு, உழவர்சந்தை பிரிவு ஆகிய இடங்களில் காலை, மாலை நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விதிமீறும் ஆட்டோக்களை போலீசாரும் கண்டு கொள்வது இல்லை.வீதி மீறி வாகனம் ஓட்டுபவர்களை மற்ற வாகன ஓட்டிகள் ஏதாவது கூறினால், அவர்களுடன் ஆட்டோ டிரைவர்கள் சண்டைக்கு செல்வதும் தொடர்கிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அலுவலகம், பள்ளிக்கு செல்லும், திரும்பும் நேரமான காலை 7:00 முதல் 10:00 மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி நகர் பகுதிக்குள் கனரக வாகனங்கள் வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.