| ADDED : ஜூலை 31, 2024 05:37 AM
கம்பம், : மேகமலையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து மின் உற்பத்தி முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.மேகமலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது மழையின் அளவு குறையும். ஆனால் கடந்த மூன்று நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குளிர், பனி மூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து விட்டது.தொடர் மழை காரணமாக ஹைவேவிஸ் , வெண்ணியாறு, மணலாறு, இரவங்கலாறு அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளில் முழு கொள்ளளவை எட்டும் நிலை இருப்பதால், சுருளியாறு மின் நிலையத்தில் முழு வீச்சில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஹைவேவிஸ் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், அணைகளில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. எனவே தண்ணீரை வெளியேற்றி சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் மின் உற்பத்தியும், தேவைப்படாத பட்சதில் 20 மெகாவாட் மின் உற்பத்தியும் தேவைக்கேற்ப அதேசமயம் தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்றனர். மழை விடாமல் பெய்து வருவதால் சின்னமனூர் முதல் ஹைவேவிஸ் வரை உள்ள மலை ரோட்டில் மண் சரிவுகள், மரங்கள் ஒடிந்து விழுவது நடக்கும் என்பதால் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.