| ADDED : மே 10, 2024 05:31 AM
தேனி: வீரபாண்டி சித்திரை திருவிழாவில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன இனிப்பு, கார வகைகள் 45 கிலோ, 25 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. பொதுமக்கள் கவனமுடன் உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட தற்காலிக உணவுபொருட்கள் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கடைகளில் ஆய்வு செய்ய கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ராகவன் அறிவுறுத்தலில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டியராஜ், சக்தீஸ்வரன், ஜனகர்ஜோதிநாதன், மதன் குமார், மணிமாறன் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அல்வா கடை, பாஸ்ட்புட், பானிபூரி, பழக்கடைகள், ஐஸ்கிரிம் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன, அதிக அளவில் செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட 45 கிலோ இனிப்பு கார வகைகள், 25 லிட்டர் குளிர்பானங்கள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட 10 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்து அழித்தனர். மூன்று கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம், இரு கடைகளுக்கு தலா ரூ.2ஆயிரம் அபராதம் விதித்தனர். பொதுமக்கள் உணவுப்பொருட்கள் வாங்கி சாப்பிடும் போது கவனமுடன் இருக்க அறிவுறுத்தினர். தயாரிப்பு, காலாவதி தேதி இன்றி விற்பனை செய்யப்பட்டால் 94440 42322 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றனர்.