தேனி: இட தகராறில், துப்பாக்கியால் மிரட்டிய தி.மு.க., நிர்வாகி, அவரது உறவினர்கள் மற்றும் எதிர்தரப்பினர் என 8 பேரை, போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், பாலார்பட்டியை சேர்ந்தவர் சத்யா, 41. இவரது வீட்டின் முன், 12 அடி பொதுப்பாதை உள்ளது. இப்பாதை தொடர்பாக, அருகில் உள்ள நில உரிமையாளர்களான மணவாளன், ராமசாமி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டார். பின், வீரபாண்டி போலீசில் இருதரப்பினரும் புகார் அளித்த நிலையில், நீதிமன்றம் மூலம் தீர்வு காண வலியுறுத்தி போலீசார் அனுப்பினர். இருதரப்பினரும் பெரியகுளம் சப் - கலெக்டரிடம் புகார் அளித்தனர். இடத்தை அளக்க நேற்று காலை அதிகாரிகள் சென்றனர். அப்போது, மணவாளன், ராமசாமி தரப்பினர் தகராறு செய்ததால், அதிகாரிகள் திரும்பி விட்டனர். சத்யா தன் தங்கை கணவரும், தி.மு.க., தெற்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளருமான ரவி, 54, என்பவரை மொபைல் போனில் அழைத்தார். அவர் ஒரு காரில், தன் ஆதரவாளர்களுடனும், கைத்துப்பாக்கி உட்பட ஆயுதங்களுடன் வந்து மணவாளன், ராமசாமி தரப்பினரை தாக்கி காயங்களை ஏற்படுத்தினார். எதிர்தரப்பினர் தாக்குதலில், டிரைவர் சிவசக்தி, 42, காயமடைந்தார். நான்கு பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிந்து, இரு தரப்பிலும், சூரஜ், 24; ரவி, ராஜா, 30; ராமராஜ், மணவாளன், சின்னசாமி, பிரத்விராஜ், அபிராஜ், ஆகிய 8 பேரை கைது செய்து, துப்பாக்கி, காரை பறிமுதல் செய்தனர்.