உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறி செடி,கொடிகளை அகற்றிய அவலம் உத்தமபாளையம் தாமரைக்குளத்தில் ஆக்கிரமிப்பாளர் ஆதிக்கம்

ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறி செடி,கொடிகளை அகற்றிய அவலம் உத்தமபாளையம் தாமரைக்குளத்தில் ஆக்கிரமிப்பாளர் ஆதிக்கம்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் தாமரைக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறி செடி, கொடிகளை அகற்றிய அவலம் அரங்கேறியுள்ளது. ஆக்கிரமிப்பால் பாசனத்திற்கு தேவையான நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கில் கம்பத்தில் வீரப்ப நாயக்கன்குளம், ஒட்டு உடப்படி குளங்கள், சின்னமனூரில் கருங்கட்டான்குளம், செங்குளம், குப்பிசெட்டிகுளம், புதுப்பட்டியில் இடையகுளம், காமயகவுண்டன்பட்டியில் கேசவபுரம் கண்மாய் என பல பெரிய கண்மாய்கள் உள்ளன. இவைகளில் உத்தமபளையம் தாமரைக்குளம் கண்மாய் பாசனத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இக் கண்மாய் உத்தமபாளையத்திலிருந்து சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் கோகிலாபுரம் அருகே உள்ளது. ராமசாமி நாயக்கன் பட்டியையும், கோகிலாபுரத்தையும் இணைக்கிறது. தாமரைக்குளம் கண்மாய் 55 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய் இப்பகுதியில் உள்ள பாளையம் பரவு பகுதியில் சுமார் 600 ஏக்கர் பரப்பிற்கு இருபோக நெல் சாகுபடிக்கு பாசன வசதி கிடைக்கிறது. மேலும் ராமசாமி நாயக்கன்பட்டி, பரமத் தேவன்பட்டி, கோகிலாபுரம், ஒத்தப்பட்டி, ஆனைமலையன்பட்டி, முத்துலாபுரம், உத்தமபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்படுகிறது. கோடை காலங்களில் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.இக் கண்மாயிலும் ஆக்கிரமிப்பாளர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. கண்மாயை ஆக்கிரமித்து தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மற்றொரு பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி வளர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றி சென்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். தென்னை மரங்களுக்கு நம்பர் போட்டு விட்டோம் என்கின்றனர். அதனால் என்ன பயன் என்று தெரியவில்லை. ஆக்கிரமிப்பாளர்களால் நீர் தேங்கி நிற்கும் பரப்பு குறைந்து விட்டது.இது ஒருபுறமிருக்க கண்மாய் தூர்வாரி 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் மண் மேவி வருகிறது. இதனால் கண்மாய் இருந்த இடம் தெரியாமல் போகும் அவலநிலை உருவாகி வருகிறது. ஆகாயத்தாமரை கண்மாய் முழுவதும் வளர்ந்து கண்மாயை மூடியுள்ளது. மறுபுறம் கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்த காடாக மாறி விட்டது. இதனால் கண்மாயில் தண்ணீர் தேக்க முடியவில்லை. முழு கொள்ளளவில் தண்ணீர் தேங்காததால், பாசனத்திற்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

கருவேல மரங்களை ஏலம் விட வேண்டும்

பரசுராமன், இயற்கை ஆர்வலர், உத்தமபாளையம் : கண்மாயை தூர் வார வேண்டும், வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.கருவேல மரங்களை ஏலம் விட்டு அரசிற்கு வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கலாம். அந்த நிதியை கொண்டு கண்மாய் தூர் வாரலாம். விவசாயிகளின் கோரிக்கையை பொதுப்பணித்துறை பரிசீலிக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

மார்க்கண்டன், விவசாயி, வாய்க்கால்பட்டி : கண்மாயை தூர் வாரி பாசனத்திற்கு தேவையான நீரை தேக்கி வைக்க வேண்டும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்போது, இந்த கண்மாய் பெரிதும் விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆகாயத்தாமரை மற்றும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை