உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மா மரங்களில் பூ பூக்காததால் விவசாயிகள் புலம்பல்! மகசூல் முழுமையாக பாதிக்கும் என அச்சம்

மா மரங்களில் பூ பூக்காததால் விவசாயிகள் புலம்பல்! மகசூல் முழுமையாக பாதிக்கும் என அச்சம்

தேனி மாவட்டத்தில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம், போடி, கம்பம் வட்டாரங்களில் மா சாகுபடி அதிகம் உள்ளது. மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கணிசமான பரப்பளவில் மட்டும் ஆற்றுப் பாசனத்தில் உள்ளது. மா சாகுபடி வறட்சியை தாங்கி வளரக் கூடிய பயிராகும். இதற்கு பெரிய அளவில் உரம் பூச்சி மருந்துகள் செலவு செய்ய தேவையில்லை. அதே சமயம் நல்ல வருவாய் தரும் பயிராகும்.இப் பகுதியில் காசா, கல்லாமை, செந்தூரம், அல்போன்சா, கிரேப்ஸ் உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரியில் பூ பூக்கும். அறுவடை ஏப்ரலில் துவங்கி ஜுன் வரை இருக்கும். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரமாகியும் மா மரங்களில் இதுவரை பூ எடுக்கவில்லை. இனி பூ எடுக்குமா என்பதும் தெரியவில்லை. இதனால் இந்தாண்டு மா மகசூல் முழுமையாக பாதிக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது.கம்பம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டியன் ராணா கூறுகையில், கடந்த ஜனவரி முதல் வாரம் வரை மழை பெய்ததால் மா மரங்களில் பூ எடுக்கவில்லை. அதற்கு பின் கடுமையான வெப்பம் தற்போது வரை நிலவுகிறது. கொழுந்து இலை தெரிந்தது. ஆனால் பூ பூக்கவில்லை. சீசன் மாறி வருகிறது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.மா சாகுபடி விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், மா மரத்தில் டிசம்பர், ஜனவரியில் பூ எடுத்திருக்க வேண்டும். தேவையான பூச்சி கொல்லி மருந்துகள் தெளித்தோம். ஆனாலும் மரங்களில் பூ எடுக்கவில்லை. பொதுவாக ஏப்ரலில் காய் பறிப்பு ஆரம்பமாகும். ஆனால் இப்போது வரை மரமாகவே உள்ளது. மகசூல் இல்லாததால் விவசாயிகளுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றார். மா சாகுபடியில் ஒரு ஆண்டு நல்ல மகசூல் ருந்தால் அடுத்தாண்டு மகசூல் மோசமாக இருக்கும். ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி