குடும்பத்தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை
கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் வருஷநாடு அருகே சிங்கராஜபுரத்தில் தமிழன் 54, குடும்பத்தகராறில் மகன் ரிவன்ராஜாவை 30, அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்தார்.சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த தமிழன் மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மூத்த மகள் திருமணம் முடித்து வெளியூரில் உள்ளார். மகன் ரிவன்ராஜா மது போதைக்கு அடிமையானதால் திருமணம் செய்யவில்லை. மேலும் சரியாக இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணம் கேட்டு பெற்றோரிடம் ரிவன்ராஜா தகராறு செய்தார். தந்தை மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுபோதையில் ரிவன்ராஜா வீட்டிற்கு வெளியில் தூங்கினார். நள்ளிரவில் ரிவன்ராஜாவை தமிழன் அரிவாளால் வெட்டினார். இதில் ரிவன்ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று அதிகாலை வருஷநாடு போலீஸ் ஸ்டேஷனில் தமிழன் சரணடைந்தார். போலீசார் ரிவன்ராஜா உடலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.