| ADDED : டிச 08, 2025 06:24 AM
மூணாறு: கேரளாவில் முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஏழு மாவட்டங்களில் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இம்மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக டிச.9, 11ல் நடக்கிறது. முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச.9ல்) தேர்தல் நடக்கிறது. அந்த மாவட்டங்களில் பிரசாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் ஓய்ந்தது. மூணாறில் காங்கிரஸ், இடதுசாரி, பா.ஜ., ஆகிய கூட்டணி கட்சிகள் இறுதி நேரத்தில் 'ரோடு ஷோ' நடத்தி, அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஏழு மாவட்டங்களிலும் 36,630 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். முதல்கட்ட தேர்தல் தொடர்பான விபரங்கள்: ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 24,431, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 69,927 ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய ஏழு மாவட்டங்களில் டிச.11ல் தேர்தல் நடக்கிறது. அதற்கான பிரசாரம் நாளை (டிச.9) மாலையுடன் நிறைவு பெறுகிறது.