உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாக்கடை வசதி இன்றி கழிவுநீர் வீட்டிற்குள் புகும் அவலம் சுகாதாரக்கேட்டில் தவிக்கும் சங்கராபுரம் ஊராட்சி

சாக்கடை வசதி இன்றி கழிவுநீர் வீட்டிற்குள் புகும் அவலம் சுகாதாரக்கேட்டில் தவிக்கும் சங்கராபுரம் ஊராட்சி

போடி: சங்கராபுரம் ஊராட்சியில் சாக்கடை, ரோடு, பாலம், தடுப்புச் சுவர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றியும், சாக்கடை தூர்வாராததால் கழிவுநீர் வீட்டிற்குள் புகும் அவல நிலையால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.சின்னமனூர் ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி 2 வது வார்டில் கீழப்பட்டி மேற்கு தெரு, கிழக்கு மந்தைக் குளம் தெரு, அழகர்சாமி கோயில் தெரு, நடுத்தெரு, கிழக்குத் தெருக்கள் அடங்கியுள்ளன. 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான தெருக்களில் ரோடு பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. கீழப்பட்டி மேற்கு தெருவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் தெருவின் மையத்தில் சேதமடைந்த மின் கம்பங்கள் உள்ளன. நடுத்தெரு, கிழக்கு தெரு மெயின் ரோடு தெருக்களில் குடிநீர் பொது குழாய் இருந்தும் திருகுகள் இல்லாததால் குடிநீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. மின்கம்பம் இருந்தும் விளக்குகள் இல்லாததால் தெருக்கள் இருளில் மூழ்கி உள்ளன. நடுத்தெரு மெயின் ரோட்டில் தனியார் நடுநிலைப்பள்ளி அருகே சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் வீடுகளுக்கு புகும் நிலை உள்ளது. தேங்கிய கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையால் மக்கள் சுகாதாரகேட்டில் தவிக்கின்றனர். ஊரின் மையத்தில் உள்ள குடிநீர் தொட்டி ஆபத்தான நிலையில் சேதம் அடைந்துள்ளது. ஊராட்சி பொதுமக்கள் கருத்து

குண்டும், குழியுமான ரோடு

உதயகுமார், சங்கராபுரம்: கீழப்பட்டி மேற்கு தெருவில் ரோடு அமைத்து 25 ஆண்டுகளுக்கு மேலானதால் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. சாக்கடை வசதி இன்றி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேக்கமாகி உள்ளது. இதனால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. சேதம் அடைந்த ரோடால் டூவீலர் தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றோம். ரூ.5 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் கட்டி 6 ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் பயன்பாடின்றி உள்ளது. பைப்கள் சேதம் அடைந்து வருகின்றன. சுகாதார வளாகத்தின் பின்பகுதியில் மின் கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக தெருவில் மையத்தில் மின்கம்பங்கள் உள்ளது ஆபத்தாக உள்ளது. ரோடு சீரமைக்கவும், சேதம் அடைந்த மின் கம்பங்கங்களை அகற்றிட ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவு தேக்கம்

ராமு, சங்கராபுரம்: பழைய தண்ணீர் தொட்டி ஓடையில் தடுப்புச் சுவர், பாலம் வசதி இல்லாததால் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேங்கி உள்ளன. இதனால் சாக்கடை கழிவு சீராக செல்ல முடியாமலும், மழை காலங்களில் மழைநீர் செல்ல வழி இன்றி குளம் போல தேங்கி கழிவு நீருடன் மழை நீரும் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட சாக்கடை தடுப்புசுவர் முறையாக அமைக்காததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேக்கமாகிறது.

குப்பையால் மாசுபடும் குளம்

செந்தில், சங்கராபுரம்: கிழக்கு மந்தைகுளம் ஓடையில் மழைநீர், கழிவுநீர் செல்ல வழி இன்றி பாதை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் தேங்கிய கழிவு நீரால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேட்டில் பாதிக்கின்றனர். தெருக்களில் குப்பை அகற்றாததால் மந்தை குளத்தில் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் தண்ணீர் மாசு ஏற்வதோடு, மழை நீரை முழுவதும் தேக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் சீராக வெளியேறும் வகையில் செய்திட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி ஒதுக் கீடு இல்லை

ஜெயலட்சுமி, சங்கராபுரம் ஊராட்சி தலைவர் : அரசிடமிருந்து போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 70 லட்சம் மதிப்பில் தர்மத்துப்பட்டி சங்கராபுரம் பகுதியில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. 2 வது வார்டு கிழக்கு தெருவில் இருந்து கீழப்பட்டி வரை மெட்டல் ரோடு போடப்பட்டுள்ளது. சாக்கடை, ரோடு, பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ