| ADDED : நவ 23, 2025 03:36 AM
கம்பம்: தொல்லை தரும் தெருநாய்களை சுருளி அருவி பகுதியில் விட்டு செல்கின்றனர். தெருநாய்கள் தொல்லை தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது. புளு கிராஸ் அமைப்பிற்கு பயந்து நாய்களை யாரும் கொல்லுவதில்லை. கோர்ட் உத்தரவுப்படி தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப் படுகிறது. போதிய நிதி ஆதாரம் இல்லாத உள்ளாட்சி நிர்வாகங்கள் இப் பணியை பெயரளவில் செய்கின்றன. இதன் விளைவு தெரு நாய்கள் தொல்லை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தெருக்களில் தொல்லை தரும் நாய்களை அந்த வீதியில் வசிப்பவர்களே பிடித்து, சுருளி அருவி பகுதியில் பாலத்தின் அருகில் விட்டு செல்கின்றனர். வீடுகளில் வளர்க்க முடியாத நாய்களையும் இதே போல் விட்டு செல்கின்றனர். இந்த நாய்களால் இங்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கும், திதி கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகின்றது. இரவில் உலா வரும் மான்கள், கேளையாடு களுக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக தெருநாய்கள் கூட்டம் இருப்பதாக கூறுகின்றனர். இது குறித்து கம்பம் கிழக்கு ரேஞ்சர் பிச்சை மணி கூறுகையில், 'அருவியில் வனத்துறைக்கு கட்டுப்பட்ட பகுதியில் நாய்கள் இல்லை. வனப்பகுதிக்கு வெளியே பாலம் அருகில் இருக்கலாம். வன உயிரினங்களுக்கு ஆபத்து இல்லை,' என்றார்.