| ADDED : செப் 30, 2011 01:30 AM
தேனி : 'லஞ்சம் ஊழல் இல்லாத நிர்வாகம் வழங்குவேன், நகராட்சி சார்பில் மக்கள் சேவைகள் வீடு தேடி வரும்' என தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். தேனி நகராட்சி தே.மு.தி.க.,வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த முறை கவுன்சிலராக இருந்தவர். இவரது செயல்பாட்டில் திருப்தி அடைந்த கட்சி மேலிடம் இவருக்கு இம்முறை நகராட்சி தலைவராக போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: நான் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றால் லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகம் வழங்குவேன். பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உட்பட மக்கள் சேவைகள் வீடு தேடி வரும். 2060ம் ஆண்டு வரை மக்கள் தொகை கணக்கெடுத்து தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வசதியாக பெரியாற்றில் இருந்து புதிய குடிநீர் திட்டம் கொண்டு வருவேன்.
துப்புரவு பணிகளை நகராட்சி பணியாளர்களை நியமித்து நல்ல முறையில் நகரை சுத்தம் செய்வேன். காய்கறி மார்க்கெட், சந்தைகள் நவீனமாக்கப்படும். மீறு சமுத்திரம் கண்மாய் சுத்தப்படுத்தப்பட்டு, படகு போக்குவரத்து தொடங்கப்படும். திட்டச்சாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நகராட்சி சார்பில் இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும். சிவராம் நகரில் நிலத்தடி நீர் கெட்டு விட்டது. நகராட்சி குப்பை கிடங்கினை அகற்றி நிலத்தடி நீரை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். பாதாள சாக்கடை பணிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு, ரோடுகள் சீரமைத்து வழங்கப்படும்.
நகரில் தேவைப்படும் இடங்களில் எல்லாம் கழிப்பறைகள் கட்டப்படும். உலர் கழிப்பிடம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும். வீரப்ப அய்யனார் கோயில் ரோடு சீரமைக்கப்படும். பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து வசதி செய்யப்படும். எரிவாயு தகன மேடை விரைவில் அமைக்கப்படும். வார்டுகளை முறையாக பிரித்து, இளைஞர்களுக்கு உடல் திறன் மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.