உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பேரூராட்சிகளில் தண்டலர் பணியிடம் காலி : வரி வசூலிப்பதில் சிக்கல்: வருமானம் இழப்பு

பேரூராட்சிகளில் தண்டலர் பணியிடம் காலி : வரி வசூலிப்பதில் சிக்கல்: வருமானம் இழப்பு

உத்தமபாளையம் : மாநிலம் முழுவதும் பேரூராட்சி அலுவலகங்களில் நீண்டகாலமாக காலியாக உள்ள வரித்தண்டலர் பணியிடம் நிரப்பப்படாததால், வரி வசூலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலகங்களில் வரியினங்களை வசூலிக்க, வரித்தண்டலர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது. முதல் நிலை, தேர்வுநிலை ஆகிய தரத்தை பொருத்தும், மக்கள் தொகை அடிப்படையிலும் இரண்டு முதல் நான்கு பேர் வரை இப்பணிக்கு நியமிக்கப்படுகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, தொழில் வரி, கேளிக்கை வரி, குடிநீர் வரி, பராமரிப்பு, சேவை வரி உள்ளிட்டவற்றை வசூலிப்பதையும், அது தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் கவனிப்பது இப்பணியாளர்களே.

தமிழகம் முழுவதிலும் 80 சதவீத பேரூராட்சிகளில் காலியாக உள்ள இப்பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக நிரப்பப்படாமலே உள்ளன. இதனால், வரியினங்களை வசூலிப்பதில் சிக்கலும், சுணக்கமும் ஏற்பட்டு, வரியினத்தில் பெரும் பகுதி நிலுவையாகி விடுவதுடன், காலப்போக்கில் வராத வரியினமாகி விடுகிறது. இதுதவிர வரிகளை வசூலிக்கும் அலுவலர்கள் உரிய கணக்குகளை காட்டாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. இதனால், அரசிற்கு பெரும் இழப்பும் ஏற்படுகிறது. இப்பணியில் மற்ற பணியாளர்களை ஈடுபடுத்தும்போது, அவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகி விடுகிறது. எனவே, வரித்தண்டலர் பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி