மேலும் செய்திகள்
பக்தர்கள் வாகன வேகத்தை கட்டுப்படுத்த முகாம் தேவை
24-Nov-2024
கம்பம் : சபரிமலையில் இருந்து திரும்பும் மற்றும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்களை கம்பம் பைபாஸ் ரோட்டில் அதிகாலை 12:00 மணிக்கு நிறுத்தி 'ரிலாக்ஸ்' செய்து செல்ல கம்பம் டிராபிக் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.தென் மாநிலங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களில் சபரிமலை ஐயப்பன் கோயில் முதன்மையானதாகும். ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்கி, 48 நாட்கள் கழித்து கோயிலிற்கு செல்வது வழக்கமாகும். ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் செல்கின்றனர். இரவும் பகலும் வாகனங்கள் செல்கின்றன. ஆண்டுதோறும் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் பலியாகின்றனர். கடந்த வாரம் கம்பம் பைபாஸ் ரோட்டில் சபரிமலையில் இருந்து திரும்பிய வாகனம் விபத்துக்குள்ளாகி 8 வயது சிறுவன் பலியானான். இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். குறிப்பாக கம்பம் டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை 12:00 மணி முதல் 3:00 மணி வரை சிறப்பு நடவடிக்கை என்ற பெயரில் பைபாஸ் ரோட்டில் நின்றனர்.சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்களையும், சபரிமலைக்கு செல்லும் வாகனங்களையும் நிறுத்தி, டிரைவரை இறங்கச் சொல்லி முகத்தை கழுவ சொன்னார்கள். பின்னர் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்து செல்ல அறிவுறுத்தினர். துாக்கம் வந்தால் ரோட்டின் பக்கவாட்டில் வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் துாங்கி விட்டு செல்லவும், இரவு நேரங்களில் வேகத்தை குறைத்து செல்லவும் வலியுறுத்தினர்.அதிகாலை 12:00 மணி முதல் 3:00 மணிக்குள் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டு, டிரைவர்கள் 'ரிலாக்ஸ்' செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். கம்பம் டிராபிக் போலீசாரின் இந்த நடவடிக்கை விபத்தில்லா சபரிமலை யாத்திரைக்கு வழி வகுக்கும்.
24-Nov-2024