உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  தீயணைப்பு துறை துணை இயக்குநரை சிக்க வைக்க முயன்ற லஞ்ச வழக்கு

 தீயணைப்பு துறை துணை இயக்குநரை சிக்க வைக்க முயன்ற லஞ்ச வழக்கு

திருநெல்வேலி: திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபுவை 50, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்க வைக்க முயன்ற வழக்கில் மேலும் இரு தீயணைப்பு வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவரை 5 பேர் கைதாகியுள்ளனர். துணை இயக்குனர் சரவணபாபுவை 50, லஞ்ச வழக்கில் சிக்க வைக்க தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரியும் சிலரின் உதவியுடன் லஞ்ச ஒழிப்பு ரெய்டு திட்டத்தை செயல்படுத்தினர். நவ., 17 இரவில் துணை இயக்குனர் அலுவலகத்தில் ரூ 2.50 லட்சத்தை மர்ம நபர் மூலம் வைத்தனர். அதை வைத்த நபர்களே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து சோதனை நடத்த கட்டாயப்படுத்தினர். பத்திரிகையாளர்களுக்கும் சோதனை குறித்து தகவல் தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றி சரவணபாபு மீது கணக்கில் வராத பணம் வைத்திருந்ததாக வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு எதிர் வீட்டு சிசிடிவி கேமராவில் மர்ம நபர் முன்தினம் இரவே பணம் வைத்து சென்ற காட்சி பதிவானதால் போலி ரெய்டு திட்டம் அம்பலமானது. துணை இயக்குனர் சரவணபாபு புகாரின்படி போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர். பணத்தை வைத்த விஜய் நேற்று முன்தினம் மும்பையில் கைதானார். ஏற்கனவே இவ்வழக்கில் தூத்துக்குடி தீயணைப்பு வீரர் ஆனந்த், அவரது உறவினர் முத்து சுடலை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்திய திருநெல்வேலி டவுன் தீயணைப்பு வீரர் மூர்த்தி, சென்னை அம்பத்தூர் தீயணைப்பு வீரர் முருகேசன் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெருமாள்புரம் ஸ்டேஷனில் விசாரணை நடந்தது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.5 லட்சத்தை அனுப்பிய கோவை தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர், பத்திரிகையாளர்களுக்கு ரகசியமாக இச்சோதனையை செய்தியாக்க தகவல் தெரிவித்த உயர் அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறையில் நீண்ட காலமாக பணிபுரியும் சிலர் இத்திட்டத்தின் பின்னணியில் உள்ளனர். இவர்கள் அனைவரது அலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் சரவண பாபுவை சிக்க வைக்க ஒரு மாதமாக திட்டமிட்டதும், வாட்ஸ்ஆப் குழு ஒன்றை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. அலுவலகத்தில் இரவு பணம் வைக்க வருபவர் அதிகாரி இல்லாத நேரத்தில் பகலில் வரவழைக்கப்பட்டு அலுவலக துணை இயக்குனர் அறைக்கு எப்படி செல்ல வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. துணை இயக்குனர் அலுவலக அனைத்து சாவிகளும் தினமும் மாலை 6:00 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். மறுநாள் அங்கிருந்து சாவியை கொண்டு வந்து திறப்பார்கள். அதை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் அந்த சாவியைப் போல மாற்று சாவி தயார் செய்து பணம் வைத்த விஜயிடம் கொடுத்துள்ளனர். தீயணைப்பு, லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விசாரணை விரைவாக நடப்பதாகவும் ஆதாரங்கள் அடிப்படையில் தொடர்புள்ள அதிகாரிகள் கைது செய்யப்படுவர் எனவும் போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ