| ADDED : டிச 05, 2025 07:51 AM
திருநெல்வேலி: துாத்துக்குடியில் போலீஸ் ஸ்டேஷனில் பாண்டியராஜன் என்பவர்இறந்த வழக்கில், அவரது மனைவிக்கு ரூ .3 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. துாத்துக்குடி அபிஷேகநாதர் சர்ச் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் பாண்டியராஜன் கைது செய்யப்பட்டு, தெற்கு ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டார். 2017 பிப்ரவரி 3ம் தேதி அதிகாலையில் காவலில் மரணமடைந்தார். பிரேதப் பரிசோதனையில், இதய நோயுடன் தொடர்பில்லாத கடுமையான இரண்டு காயங்கள் உடலில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. நீதித்துறை நடுவர் “காவலில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அதனால் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கான உண்மையான காரணம்” என்று தெரிவித்திருந்தார். மேலும், உயரதிகாரிகள் அதிகாரப்பூர்வ விசாரணைக்கு முன் உடலை ஆய்வு செய்தது மனித உரிமை வழிகாட்டுதலை மீறியதாக அறிக்கை கண்டித்தது. மனித உரிமை ஆணைய உறுப்பினர் எஸ். கண்ணதாசன் உத்தரவின்படி, இறந்தவரின் மனைவி சாந்திக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அந்தத் தொகையை துாத்துக்குடி தெற்கு ஸ்டேஷன் எஸ்.ஐ. சாந்தி செல்வியிடம் வசூலிக்கவும் பரிந்துரைத்துள்ளது. எஸ்.ஐ., மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டு தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்க மாநில அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.