உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / 11 மணி முதல் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் : 4 மணிக்குள் பட்டியலை அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவு

11 மணி முதல் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் : 4 மணிக்குள் பட்டியலை அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவு

திருநெல்வேலி : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தினமும் காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். தினமும் 4 மணிக்குள் இப்பட்டியலை அனுப்ப அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அனைத்து உள்ளாட்சிகளிலும் ஓட்டுச் சாவடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைத்து கட்சியினருக்கும் வழங்கப்பட்டு அவர்களிடம் பரிந்துரைகள் பெறப்பட்டன. உள்ளாட்சி தேர்தலை உரிய முறையில் நடத்தும் வகையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், உரிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டது. இவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. உள்ளாட்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களிடம் வேட்பு மனுக்களை பெறும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை பெறும் போது உரிய இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என தெரியும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தனியாக பெயர் போர்டு வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பது குறித்து வேட்பாளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளர் தகுதிகள், முன்மொழிபவர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிவிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பெற்று கொள்ளப்படும். ஒவ்வொரு நாளும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தவரின் விபரங்கள், கட்சிகள் குறித்த அனைத்து தகவல்களையும் 4 மணிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தினமும் 5 மணிக்குள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இந்த பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை