கோதையாறு வனத்தில் விடப்பட்டது கூடலுார் யானை ராதாகிருஷ்ணன்
திருநெல்வேலி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிடிபட்ட யானை ராதாகிருஷ்ணனை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். பின் கோதையாறு வனப்பகுதியில் விட்டனர். கூடலூர் ஓவேலி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 12 பேரை தாக்கிய ராதாகிருஷ்ணன் என்ற ஆண் காட்டு யானையை வனத்துறையினர் செப்., 23ல் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். முதுமலை புலிகள் காப்பகம், அபயாரணயம் யானைகள் முகாமில் அமைக்கப்பட்ட கராலில் அடைத்து யானையை கண்காணித்து வந்தனர். உயரதிகாரிகள் உத்தரவின்படி கராலில் இருந்த காட்டு யானை ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் நள்ளிரவு கும்கி யானைகள் உதவியுடன் வெளியே அழைத்து வரப்பட்டது. பின்னர் லாரியில் ஏற்றப்பட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோதையாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.