உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆசிரியை உட்பட இருவரிடம் 160 சவரன், ரூ.37 லட்சம் மோசடி இரு பெண்கள் கைது: பாதிரியாருக்கு வலை

ஆசிரியை உட்பட இருவரிடம் 160 சவரன், ரூ.37 லட்சம் மோசடி இரு பெண்கள் கைது: பாதிரியாருக்கு வலை

திருநெல்வேலி: ஓய்வு பெற்ற ஆசிரியையிடம், 160 சவரன் நகைகள், 1.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த பாதிரியார் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே தெற்குகள்ளிகுளத்தை சேர்ந்தவர் அமிர்த ஹெலன் ராஜாத்தி, 63; ஓய்வு பெற்ற ஆசிரியை. இவருக்கு, 1990ல் ஆசிரியர் வேலை கிடைக்க உதவிய கள்ளிகுளம் கத்தோலிக்க பாதிரியார் தேவராஜன், அவரது உதவியாளர் பவுலின் ராணி ஆகியோர், தாங்கள் நடத்தும் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்திற்கு நிதி கேட்டனர். கடந்த ஆண்டு நவம்பரில், 1.5 லட்சம் ரூபாய் காசோலையாக பெற்றனர். மேலும், அமிர்த ஹெலன் ராஜாத்தி, அவரது மகளின் 160 சவரன் நகைகளை வாங்கினர். ஆனால், பணத்தையோ, நகைகளையோ திருப்பி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, நகைகளை அடகு வைத்து கிடைத்த பணத்தை, இரிடியம் தொழிலில் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும் எனவும் கூறினர். ரிசர்வ் வங்கி உட்பட பல்வேறு வகைகளில் தமக்கு பணம் வருவதாக, போலி ஆவணங்களை காட்டியும் ஏமாற்றினர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமிர்த ஹெலன் ராஜாத்தி, சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் செய்தார். பாதிரியாரின் உதவியாளர் பவுலின் ராணி, 54, போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பாதிரியார் தேவராஜன், மதுரை ரயில்வே காலனியை சேர்ந்த பெருமாள் செட்டியார், பாலசுப்பிரமணியன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதில், பெருமாள் செட்டியார், பாலசுப்பிரமணியன் புதுச்சேரியில் ஜனனி பாரத் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். தென்காசி, குத்துக்கல்வலசை பாரதிநகர் ஹரிஹர சுப்பிரமணியன் மனைவி விஜயலட்சுமி, 50. இவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்த சுப்புராஜ் மனைவி ஜெயகுரு, இரிடியம் திட்டத்தில், 1 லட்சம் முதலீடு செய்தால், 1 கோடி ரூபாய் கிடைக்கும் என, கூறினார். மேலும், சிறிது, சிறிதாக, 36 லட்சம் ரூபாய் வரை விஜயலட்சுமியிடம் பெற்றார். ஜெயகுருவுடன், கோவை ஆனைமலையை சேர்ந்த சிவராமன், திருப்பூர் ராணி, குடுமியான்மலை ரவிச்சந்திரன், காட்பாடி ஜெயராஜ், சுவாமிநாதன் ஆகியோரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள், திருப்பூர் பெருமாநல்லுாரில் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, திருப்பூர் ராணியை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை