| ADDED : ஜூன் 28, 2024 03:01 AM
திருவாலங்காடு:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மற்றும் தக்கோலம் பகுதிகளில் சவுடு மண் குவாரி செயல்படுகிறது. இந்த மண் லாரிகள் வாயிலாக திருவள்ளூர், திருத்தணி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றன.அவ்வாறு செல்லும் லாரிகள் திருவள்ளூர் -- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு வழியாக செல்கிறது.இந்நிலையில் திருவாலங்காடு பகுதியில் அரசு மேல்நிலை, துவக்கப்பள்ளி மற்றும் பி.டி.ஓ., அலுவலகம், மருத்துவமனை, சர்க்கரை ஆலை என அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இச்சாலையில் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை, மாலை நேரங்களில் நெரிசலாக இருக்கும். இச்சாலை வழியாக கனரக வாகனங்கள் சென்று வருவதால் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் சாலையை கடந்து சென்று வந்தனர்.இந்நிலையில் தற்போது சவுடு மண் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக மாணவர்களின் பெற்றோர் புலம்புகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: காலை முதல் இரவு வரை ஓயாமல் 300க்கும் மேற்பட்ட சவுடு மண் லாரிகள் இயக்கப்படுகின்றன. இச்சாலையில் லாரிகள் தறிக்கெட்டு ஓடுகின்றன. பள்ளி உள்ள பகுதியில் கூட மெதுவாக இயக்கப்படுவதில்லை. மாணவர்கள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். நேற்று சர்க்கரை ஆலை சந்திப்பில் சவுடு மண் ஏற்றி வந்த லாரியும் மற்றொரு லாரியும் மோதிய சம்பவம் நடந்தது. எனவே மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன் கருதி பீக் ஹவர்ஸ் நேரங்களில் லாரிகள் இயக்கப்படுவதில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.