| ADDED : ஆக 04, 2024 11:27 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சி ம.பொ.சி.சாலை, சித்துார் சாலை, பைபாஸ், அரக்கோணம் சாலை, அக்கைய்யநாயுடு சாலை, கடப்பா டிரங்க் ரோடு மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும். மேற்கண்ட சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில், 50க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி தவித்து வருகின்றனர்.குறிப்பாக திருத்தணி பேருந்து நிலையத்தில் பசு மாடுகள் சுற்றிதிரிவதால் பயணியர் சிரமப்படுகின்றனர். எனவே, நகரில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க.தீபா கூறியதாவது:திருத்தணி நகராட்சியில் கால்நடைகள் சுற்றித்திரிவதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே கால்நடைகள் வளர்க்கும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கியுள்ளோம். இனிவரும் காலங்களில், சாலையில் போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்வதுடன், உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.