| ADDED : ஜூன் 28, 2024 10:57 PM
திருவள்ளூர்:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, 172 மனுக்களை பெற்றார். இதில், 21 பேருக்கு 11.07 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கினார்.கூட்டத்தில் விவசாயி ஒருவர், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டுகோள் விடுத்தார். இதற்காக, நிதி ஒதுக்கீடு வேண்டி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். தச்சூர் - சித்துார் தேசிய நெடுஞ்சாலைக்கு விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், தங்களின் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு அணுகுசாலை அமைத்து தர கோரிக்கை விடப்பட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்ட அனைத்து விவசாயிகளுடன் கலந்துரையாடி முடிவு எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மத்துார் கிராமத்தில் அரசு புறம்போக்கு, மேய்க்கால் நில ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு, திருத்தணி வருவாய் துறையினர் அளவீடு செய்து அரசு நிலத்தை மீட்க உத்தரவிட்டார்.