| ADDED : மே 16, 2024 12:42 AM
பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட உப்பளம் கிராமத்தில், குழந்தைநேய பள்ளி மேம்பாட்டு உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 28 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு துவக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.இதற்காக இங்கிருந்து பழைய வகுப்பறை கட்டடம் இடிக்கப்பட்டது. கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாகவும், புதிய கட்டடம் கட்டும் பணிகளுக்கு இடையூறாகவும், முகப்பில் இருந்த, 30 மீ. சுற்று சுவரும் இடிக்கப்பட்டது.கட்டடம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், இடிக்கப்பட்ட சுற்றுசுவரை மீண்டும் கட்டாமல் அப்படியே போடப்பட்டு உள்ளது. இதனால் பகல் நேரங்களில் கால்நடைகளின் வசிப்பிடமாகவும், இரவு நேரங்களில் குடிகாரர்களின் குடிமையமாகவும் பள்ளி வளாகம் மாறி உள்ளது.தனியார் வாகனங்களும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. தற்போது பள்ளிவிடுமுறை என்பதால் மாணவர்களுக்கு இடையூறு இல்லை.அடுத்தமாதம் பள்ளி திறக்கும்போது, சுற்று சுவர் இல்லாதது. மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கும். பள்ளி திறக்கும் முன், சுற்று சுவர் அமைத்திட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.