| ADDED : ஜூலை 28, 2024 11:04 PM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த துணை சுகாதார நிலையம் வாயிலாக அரிசந்திராபுரம், தொழுதாவூர், சின்னம்மாபேட்டையைச் சேர்ந்த 16,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்தது. இதையடுத்து, ஊராட்சி சார்பில் தனியார் இடத்தில் தற்காலிகமாக செயல்பட வழிவகுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு மருத்துவமனைக்கு உண்டான போதிய வசதி இல்லாததாலும், பெண்கள், குழந்தைகள் காத்திருக்க முடியாத சூழலும் உள்ளது. மேலும், கர்ப்பிணியர் பரிசோதனை செய்து கொள்ள இடவசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால், கர்ப்பிணியர் 5 கி.மீ., பயணம் செய்து, திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சிலர் தனியார் மருத்துவமனைக்கும் செல்கின்றனர்.எனவே, துணை சுகாதார நிலைய கட்டடம் விரைந்து அமைக்க, திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்ப்பிணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.