| ADDED : ஜூலை 29, 2024 06:25 AM
பூந்தமல்லி,: பூந்தமல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளி வளாகத்தில் புதர் மண்டி காணப்படுவதால், மாணவர்களை விஷ ஜந்துக்கள் கடிக்கும் அபாயம் நிலவுகிறது.பூந்தமல்லியில், கடந்த 1931ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் துவக்கப்பட்ட, பார்வையற்றோர் பள்ளி இயங்கி வருகிறது.முதல் உலகப்போர் வெற்றியின் நினைவாக கட்டப்பட்ட இந்த பழமையான கட்டடத்தில், 30 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி இயங்குகிறது.தற்போது, தமிழக மாற்றுத்திறனாளிகள் துறை கட்டுப்பாட்டில், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியாக இயங்குகிறது.இங்கு ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 106 மாணவர்கள் பயில்கின்றனர். மேலும், 'புக் பைண்டிங்' பாடப் பிரிவில் 22 மற்றும் தொழிற்பிரிவில் 24 பார்வையற்ற மாணவர்களும் பயில்கின்றனர். மேலும், இங்குள்ள பார்வையற்றோர் மறுவாழ்வு இல்லத்தில், 11 பேர் தங்கியுள்ளனர்.வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டடம், முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கட்டடத்தின் மீது பல இடங்களில், மரங்கள் வளர்ந்து வருகின்றன. மாணவர் விடுதி, விளையாட்டு பூங்கா என, பள்ளி வளாகம் முழுதும் புதர் மண்டி உள்ளது. இதனால், பார்வை திறன் குறைபாடுள்ள மாணவர்களை பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடிக்கும் ஆபத்து உள்ளது.எனவே, இந்த பள்ளி வளாகம் முழுதும் உள்ள செடிகளை அகற்றி, துாய்மையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.