பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்டவை புதுார், வாணிவிலாசபுரம், மேல்பொதட்டூர், பொதட்டூர்பேட்டை காலனி, சவுட்டூர் உள்ளிட்ட பகுதிகள். இங்கு, 30,000 பேர் வசித்து வருகின்றனர். இதில், புதுார் பகுதியில் கிராமத்தின் நுழைவாயில் பகுதியில் பொதுகுளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த குளம் ஆண்டு முழுதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக துார் வாரி சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. இதனால், புதர் மண்டி சீரழிந்து வருகிறது. குளத்தில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி வருகின்றன. இதனால், இந்த குளத்தின் நீர், பயன்படுத்த முடியாத நிலையில் கிடக்கிறது. குளத்தின் கரைகளும் பாழடைந்துள்ளதால், யாரும் குளத்திற்குள் இறங்குவது இல்லை. புதர்மண்டி கிடப்பதால், விஷப்பூச்சிகளும் காணப்படுகின்றன. இதனால், குடியிருப்புவாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். குளத்தை துார்வாரி சீரமைக்கவும், படித்துறை கட்டவும் அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட் டம் தச்சூரில் இருந்து ஆந்திர மாநிலம் சித்துார் வரை ஆறுவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், பள்ளிப்பட்டு ஒன்றியம், புண்ணியம் வழியாக சாணாகுப்பம் வரை அமைக்கப்பட்டு வரும் சாலையில், மேலப்பூடி பகுதியில் பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வழியாக, மேலப்பூடியை சேர்ந்தவர்கள் ஆறுவழி சாலையை எளிதாக கடந்து, பொதட்டூர்பேட்டை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவர முடியும். இந்நிலையில், புண்ணியம் பகுதியில் மேலும் இது போன்ற கடவுப் பாதைகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆறுவழி சாலையின் மறுபுறம் உள்ள தங்களின் வயல்வெளிக்கு சென்று வர வழி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல், பெருமா நல்லுார் ஏரியில் பாலம் கட்டுதல், பெருமாநல்லுார் பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களிலும் சாலை பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.