| ADDED : மே 25, 2024 11:56 PM
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த வாணியஞ்சத்திரம் கிராமத்தில் உள்ளது துணை மின் நிலையம். இங்கிருந்து மணலி, திருவேற்காடு, கோயம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு மின்மாற்றி திடீரென தீப்பற்றி எரிந்தது.தீ வானுயர கொழுந்து விட்டு எரிந்ததில், கரும்புகை அதிகமாக வெளியேறியது. இது சுற்றியுள்ள பகுதிகளில் பரவியதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். தகவலறிந்த செங்குன்றம், மாதவரம், மணலி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.காலை, 8:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து துணை மின் நிலையத்தில் இருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.இந்த விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மின்மாற்றி, மின்கம்பிகள் எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. வெங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.