உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒரு நாள் விடுமுறைக்கு பின் திறப்பு கோயம்பேடில் காய்கறி விலை உச்சம்

ஒரு நாள் விடுமுறைக்கு பின் திறப்பு கோயம்பேடில் காய்கறி விலை உச்சம்

சென்னை: விடுமுறைக்கு பிறகு கோயம்பேடு சந்தை திறக்கப்பட்ட நிலையில், பல வகை காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் நுகர்வோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மாநிலங்களில் இருந்து உருளை கிழங்கு வருகிறது. அதிக விளைச்சல் உள்ள காலங்களில், 500 லாரிகளுக்கு மேல் வரத்து இருக்கும். தற்போது, 250 லாரிகளுக்கும் குறைவாக வரத்து உள்ளது. வணிகர்கள் தினத்தையொட்டி, நேற்று முன்தினம் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.விடுமுறை முடிந்து, நேற்று மார்க்கெட்டில் வியாபாரம் துவங்கியது. வரத்து குறைவு காரணமாக பலவகை காய்கறிகளின் விலை கிலோவிற்கு 10 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், பலவகை காய்கறிகளை வாங்கி சென்று கிலோவிற்கு 30 முதல் 50 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தனர். இதனால், நுகர்வோர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.ஜூன் மாதம், முதல் வாரத்திற்கு பிறகு காய்கறிகளின் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ