| ADDED : டிச 27, 2025 06:05 AM
திருத்தணி: தார்ப்பாய் மூடாமல் சென்ற, 13 டிப்பர் லாரிகளை, மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்து, 8.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை மற்றும் திருத்தணி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், தினமும் நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் சவுடு மண், எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்கின்றன. பெரும்பாலான டிப்பர் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் அதிவேகமாக செல்வதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் சோதனை மேற்கொண்டார். அப்போது, தார்ப்பாய் மூடாமல் சென்ற, 13 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, 8.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இதுகுறித்து, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் கூறுகையில், “டிப்பர் லாரிகள் தார்ப்பாய் மூடி, குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாமல் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.