| ADDED : பிப் 03, 2024 11:43 PM
ஆவடி: அம்பத்துார், கள்ளிக்குப்பம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். இவர், தன் தந்தையின் பெயரில் உள்ள பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார்.தந்தையின் மறைவிற்கு பின், இவரது சகோதரர் சுந்தரம் என்பவர், அந்த வீட்டிற்கு தான் மட்டுமே வாரிசு என, போலி வாரிசு சான்று பெற்று, அதன் வாயிலாக, வீட்டின் பெயரில் 18 ஆண்டுகளுக்கு முன் சென்ட்ரல் வங்கியில் 16 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு உடந்தையாக, சுந்தரத்தின் மகன்கள் கோபு, பாலாஜி, நேசராஜ் ஆகியோர் இருந்துள்ளனர். இது குறித்து, ஜெயபால் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், ஆவடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.கடந்தாண்டு, சுந்தரம் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, சுந்தரத்தின் மகன் பாலாஜி, நேசராஜ் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்தது; கோபு தலைமறைவானார்.இந்நிலையில், நேற்று முன்தினம் கோபுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் மூன்றாண்டு சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.