| ADDED : நவ 19, 2025 01:42 AM
சென்னை: பெங்களூரில் நடந்த தேசிய ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை வீரர்கள் 43 தங்கம் உட்பட, 54 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். ஜெ.ஏ., சிலம்பம் அகாடமி சார்பில், நான்காவது தேசிய ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, பெங்களூரில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. போட்டியில், நாடு முழுதும் இருந்து, ஏராளமானோர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இதில், 10, 14, 17, 19 வயது மற்றும் 19 வயதுக்கு மேற்பட்டோர் என, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. போட்டியில், சென்னை செனாய் நகர், சுவாமி விவேகானந்தா சிலம்ப கூடம் அறக்கட்டளை சார்பில், 45 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். அனைத்து சுற்றுகள் முடிவில், 43 தங்கம், எட்டு வெள்ளி, மூன்று வெண்கலம் என, மொத்தம் 54 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.