| ADDED : நவ 17, 2025 03:17 AM
திருத்தணி: முருகன் கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, மூலவரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர். முருகன் மலைக்கோவிலில், 86 கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருவதால், இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களுக்கு மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம் சார்பில், 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.